Tuesday, October 22, 2024

தேவாரம் 4 - திருகச்சி ஏகம்பம்-திருக்கருகாவூர்-திருபுவனம்

 

 

6.65 திருக்கச்சி ஏகம்பம்

திருத்தாண்டகம்

 

651         உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க;

      ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம்

விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்;

              வியன் உலகில் பல் உயிரை விதியினாலே

தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும்

         திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால்

எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்

      கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

652         நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால் இல்லாத

                          நெஞ்சத்து நீசர் தம்மைக்

கூசன் காண்; கூசாதார் நெஞ்சு தஞ்சே

   குடிகொண்ட குழகன் காண்; அழகு ஆர் கொன்றை-

வாசன் காண்; மலை மங்கை பங்கன் தான்

     காண்; வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்

ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி

          ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

653         பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும்

      புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில்

மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான்

   காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்-

பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்

              பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்

இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்

       கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

654         பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான்

       காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற

சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும்

       செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும்

பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன்

                 காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த

ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி

             ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

655         பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ

   காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும்

மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண்,

        வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்,

அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்

  அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த

இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்

     கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

 

 

                               

656         ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்;

   அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை;

காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்;

      கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப்

பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர்

         பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம்

ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்

     கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

657         உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண்,

    உகந்து ஒலி நீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்,

இமய வட கயிலைச் செல்வன் தான் காண், இல்

        பலிக்குச் சென்று உழலும் நல் கூர்ந்தான் காண்,

சமயம் அவை ஆறினுக்கும் தலைவன் தான்

   காண், தத்துவன் காண், உத்தமன் காண், தானே ஆய

இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்

     கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

658         தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான்

  காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண்,

உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண்,

     ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண்,

வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண்,

         வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண்

எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி

         ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

659         முந்தை காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ

         இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத்

தந்தை காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை

           காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்

சிந்தைகாண், சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன்

           காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும்

எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி

         ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

உரை

                               

660         பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான்

        காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை

தன் இசைய வைத்த எழில் அரவினான் காண்,

         சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண்

மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை

       எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில்

இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன்,

       கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

 

திருக்கருகாவூர்

 

 

குருகாம் வயிரமாங் கூறு நாளாங்

            கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்

பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்

            பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்

ஒருகால் உமையாள் ஓர் பாக னுமாம்

            உள்நின்ற நாவிற்கு உரையா டியாங்

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   1 

 

 

(குருகு = குருத்து;  மென்மையாக குருத்து போன்றும் வைரம் பாய்ந்த மரம் போலும் இருக்கும் இறைவன்

பருகா அமுதம் = நினைத்தாலே பலன் தரும் அமிர்தம் போன்ற இறை

கூறு நாள் = சூரியனால் கூறு போட்ட (இரவு பகல் போன்ற) நாள்

 

கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும், வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள், ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான். பருகாமலேயே, மலத்தைப் போக்கும் அமுதமாவான். பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான். பாட்டில் பண்ணாக உள்ளான். ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான். நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான். முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன், முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன்.

 

வித்தாம் முளையாகும் வேரே தானாம்

            வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற

பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்

            பால்நிறமுமாம் பரஞ் சோதி தானாம்

தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்

            தோன்றாது என்னுள்ளத்தினுள்ளே நின்ற

அகத்தாம் அடியேற்குக் காணா காட்டுங்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   2 

 

பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம்

            பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற

கோத்தானாம் கோல்வளையாள் கூற னாகுங்

            கொண்ட சமயத்தார் தேவனாகி

ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம்

            ஈவானாம் என்னெஞ்சத் துள்ளே நின்று

காத்தானாம் காலன் அடையா வண்ணங்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே   3 

 

இரவனாம் எல்லி நடமா டியாம்

            எண்டிசைக்குந் தேவனாம் என்னுளானாம்

அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்

            ஆகாச மூர்த்தியாம் ஆனேறு ஏறும்

குரவனாம் கூற்றை யுதைத்தான் தானாம்

            கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்

கரவனாம் காட்சிக் கெளியா னுமாம்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   4 

 

இரவன் - இராப்பொழுதாய் இருப்பவன். எல்லி - இரவு

ஆன் ஏறு= எருது  ; குயலர்= வஞ்சகர்

 

படைத்தானாம் பாரை இடந்தா னாகும்

            பரிசொன்று அறியாமை நின்றான் தானாம்

உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்

            ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று

அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்

            அசைத்தானாம் ஆனேறு ஒன்றூர்ந்தா னாகுங்

கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே   5 

 

பிரம்மனுமாவான்.  பாரை இடந்த திருமாலும் ஆவான்

அளவற்ற தன்மைகளை உடையவன்

 

 

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்

            மூவாத மேனிமுக் கண்ணினாம்

சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும்

            செல்வனாம் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்

மாலனாம் மங்கையோர் பங்கனாகும்

            மன்றாடியாம் வானோர் தங்கட் கெல்லாம்

காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   6 

 

அரைசேர் அரவனாம் ஆலத் தானாம்

            ஆதிரை நாளானாம் அண்ட வானோர்

திரைசேர் திருமுடித் திங்களானாம்

            தீவினை நாசனென் சிந்தை யானாம்

உரைசே ருலகத்தார் உள்ளா னுமாம்

            உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்

கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகும்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   7

 

அரை = இடுப்பு

ஆலத்தான் - ஆல் நிழலில் இருப்பவன். விடம் உண்டவனும் ஆம்

உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு,

 

 

 துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்

            சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்

படிதானாம் பாவ மறுப்பா னாகும்

            பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்

கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகும்

            கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்

கடியானாங் காட்சிக் கரியா னாகுங்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   8

 

துடி= பறை.  ஒலியினும் நுட்பமாய்க் கலந்து நிற்றலின், 'துடியின் முழக்கந் தானாம்' என்றருளினார்.  கடியான் - ஒறுப்பவன்

 

 

 விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்

            விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்

பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்

            பலபலவும் பாணி பயின்றான் தானாம்

எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்

            என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்

கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகும்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.   9

 

பாணி = தாளம்.  அட்டமூர்த்தி எண் தோளன்

மன்மதனை காய்ந்தவன்

 

 பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி

            உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்

செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்

            சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்

அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி

            இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்

கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்

            கண்ணாம் கருகாவூர் எந்தை தானே    10

 

பொறுத்திருந்த - இடபமாய்ச் சுமந்திருந்த. சிவபிரான் மாயோனது உள்ளத்தில் வீற்றிருந்து அவனது மனக்கவலையை மாற்றியருளுதலை.

 

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்

            ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து

இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்

            இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்

அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே

            ஆகாய மந்திரமு மானா னாகுங்

கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்

            கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

 

 

கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன்.தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக் கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன். பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான், பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன். கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன். அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.


சுவாமி : முல்லைவனேஸ்வரர்; அம்பாள் : கரும்பனையாளம்மை

வடிவேறு திரிசூலந் தோன்றுந்

பூவணம் ( திருபுவனம்)

 

திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது.

 

 

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்

            வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்

            காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்

            எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   1

 

 

 ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்

            அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்

ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்

            ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்

சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்

            செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த

பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   2

 

 கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்

            கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று

சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்

            சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்

அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்

            ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்

பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   3 

 

படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்

            பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்

நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்

            நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்

உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று

            மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்

புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   4 

 

 

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்

            மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்

இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்

            இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்

கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை

            ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்

புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   5

 

 

 பாராழி வட்டத்தார் பரவி யிட்ட

            பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்

சீராழித் தாமரையின் மலர்க ளன்ன

            திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்

ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்

            உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று

போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   6 

 

 

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்

            சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்

மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்

            வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்

துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்

            தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்

பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   7 

 

 

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்

            திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்

நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்

            நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்

மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்

            மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்

பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   8 

 

 

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்

            அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்

மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்

            மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்

திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்

            செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்

பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   9 

 

 

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று

            தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்

பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று

            பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்

கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங்

            குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்

பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.   10 

 

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே

            அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்

வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை

            மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்

நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை

            நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்

போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்

            பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

 

 

சுவாமி : பூவணநாதர். அம்பாள் : மின்னனையாள்.   11

 


No comments:

Post a Comment