வினாயகர் பாடல்கள்
திரு ஆக்கும்; செய்கருமம் கைகூட்டும்;செஞ்சொல்
பெருவாக்கும், பீடும்பெருக்கும்; - உருவாக்கும்;
ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை. -(மூத்த நாயனார் இரட்டை மணி மாலை
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே (திருமந்திரம்)
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்;
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனுமாம்தன்மையினால்.
கண்ணிற் பணிமின் கனிந்து. (மூத்த நாயனார் இரட்டை மணி மாலை)
அல்லல்போம்;வல்வினைபோம்;அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம்;போகாத் துயரம்போம்; - நல்ல
குணம்அதிகமாம்அருளைக் கோபுரத்தின் மேவும்
கணபதியைக் கைதொழுதக்கால்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. - மூதுரை
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்
கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம் (கந்த புராணம்)
முன்னவனே யானை முகத்தவனே! முத்திநலம் சொன்னவனே!
தூய் மெய்ச் சுகத்தவனே! மன்னவனே!
சிற்பரனே! ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே!
தற்பரனே! நின்தாள் சரண்! (வள்ளலார்)
வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம். (சேக்கிழார் ஸ்வாமிகள்)
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில்.
தடபடெனக் குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கட தட கும்பக் களிற்றுக்கிளைய களிற்றினையே (கந்தர் அலங்காரம்)
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம் (விருத்தாசல புராணம்)
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!
சகட சக்கரத் தாமரை நாயகன்
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப்பசுபோதக்கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை
நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்!
நால்வாய் ஐந்து கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறை இதழி தாழ் சடையான்
தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உரு(கி) ஒட்டும் அன்போடு வணங்கி ஒவ்வாதே
இரவுபகல் உணர்வோர் சிந்தைத்-
திருகோட்டும் அயன் திருமால் செல்வமும்
ஒன்றோ என செய்யும் தேவே (சிவஞான சித்தியார்)
ஆறு,(கங்கை), தருகோட்டம் பிறை = வளைந்த சந்திரன்
இதழி = கொன்றை மாலை அனிந்தவன்….(இவற்றை எல்லம் கொண்ட
சிவபிரான் தந்த மகன்); திருகோட்டும் = திருகு அதாவது குற்றம்—திருகை ஓட்டும்.
பிரம்மனும் , திருமாலும் கொடுக்கும் செல்வம் எல்லாம் ஒரு பொருளா என உணர்த்தும்.
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்
மதித்தறியாத துன் மதியும்
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை
எந்தநாள் அடைகுவன் எளியேன்
அருள் உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே
அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே
வெருள் உறு சமயத் தறியொணாச் சித்தி
விநாயக விக்கினேச்சுரனே! (வள்ளலார்)
தஞ்சம் என்றுனைச் சார்ந்தனன் எந்தைநீ
தானும் இந்தச் சகத்தவர் போலவே
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன்
வஞ்சம் அற்றம னத்துறை அண்ணலே
பஞ்ச பாதகம் தீர்த்தனை என்றுநின்
பாத பங்கயம் பற்றினன் பாவியேன்
விஞ்ச நல்லருள் வேண்டித்த ருதியோ
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. (வள்ளலார்)
மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை, மறைசொலும்
நால்வாயானை அத்தனாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானை, சென்னியணி
ஆறானைத் துகள் ஏழானைச்
செஞ்சொல் மறைக்கெட்டானைப் பரங்கிரிவாழ்
கற்பகத்தைச் சிந்தை செய்வாம்.
வஞ்சகத்தில் ஒன்றுபடாதவன் –
வணங்கார் உள்ளே அஞ்சரணம் ஊன்றானை
நால்வாய் = தொங்கும் வாய் உடையவன்
அத்தன் = தலைவன்
சென்னியணியாரான = சிரசில் அனிகலங்கள் தரித்தவன்
துகள் ஏழானை = குற்றங்கள் எழமுடியாதபடி செய்பவன்
ஓங்கும் ஒரு
மருப்பானை உயிர்க்கு உயிராய் இருப்பானை
உரக வேந்தன்
தாங்கு நெடு
நிலத்(து) ஆனை முகத்தானை வதைத்தானை
சயில மானை
பாங்கு
வைத்து மழுத்தானை பரித்தான் தந்தளித்தானை
பசும்பொன் தோட்டுப்
பூங்கமல
பதத்தானை பொருவில் ஐந்து கரத்தானை
போற்றல் செய்வாம் (சிவராத்திரி புராணம்)
ஆனை முகத்தானை = கக முகாசுரனை
மழுத்தானை பரித்தான்= மழு ஆயுதம் ஏந்திய சிவபெருமான்
பண்ணியம் ஏந்தும் கரம் தனக்காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி, அரதனக்கலச
வியன் கரம் தந்தை தாய்க்காக்கிக்
கண்ணீல் ஆணவ வெங்கரி பிணித்தடக்கி
கரிசினேற்கு இருகையும் ஆக்கும்
அண்ணலைத், தணிகை வரை வளர்
ஆபத் சகாயனை, அகந்தழீ இக்களிப்பாம்.
பண்ணியம்= மோதகம்
மற்றொரு கையில் ஏக தந்தமாகிய ஒன்றைக் கொம்பை வைத்திருக்கிறார்; இது விண்ணவர்க்காக.
தும்பிக்கையில் நீர் நிறைந்த பொற்கலசம் வைத்திருக்கிறார். இது தாய் தந்தையாகிய பார்வதி பரமேஸ்வரரை வழிப்படுவதற்காக.
இங்ஙனம் ஒவ்வொரு கரத்தையே பிற செயலுகளுக்குப் பயன் படுத்த்தும் விநாயகப் பெருமான், தம்முடைய அடியவர்களுக்கு மட்டும் இரு கரங்களை ஒருங்கே பயன் படுத்துகிறார்.
அடியவர்களின் வினைகளை ஒழித்து இன்பங்களையே தரும் இயல்பினராகிய அவர் ஆணவ பலம் என்னும் கொடிய யானையை பிணித்து அவர்கட்கு அருள்புரிவதற்காக பாசம் அங்குசம் என்னும் அரு கருவிகளையும் எஞ்சிய இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment